பெரம்பூர் லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை..!!
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 48). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களின் மகள் ஜோனகா (22). நர்சிங் முடித்துள்ளார். ஷர்மிளாவின் தம்பி கமலநாதன் (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை ஷர்மிளா தன்னுடைய மகள், தம்பியுடன் பெரம்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் முழுவதும் அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.
நேற்றும் அவர்களின் அறை திறக்கப்படாமல் உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர் இது குறித்து செம்பியம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஷர்மிளா உள்பட 3 பேரும் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்கள் பாதி அழுகிய நிலையில் இருந்தன.
இது பற்றி அறிந்த புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகணன், செம்பியம் உதவி கமிஷனர் ஜான் ஜோசப், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த அறையில் ஷர்மிளா எழுதிய உருக்கமான கடிதம் இருந்தது.
அதில், என்னுடைய கணவர் இறந்து விட்டார். நாங்கள் கடன் தொல்லையில் இருக்கிறோம். எங்கள் சொத்து பிரச்சினை தொடர்பாக மாதவரம் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொள்கிறோம் என்று எழுதி இருந்தார்.
இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating