பஸ் தகர்ப்பு- ராணுவ வீரர்கள் 18 பேர் சாவு
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவிலாறு அணை மதகுகளை விடுதலைப் புலிகள் மூடி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிங்களர்கள் கடும்பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து அந்த அணை தண்ணீரை திறந்து விடுவதற்காக விமானப்படையினர் சரமாரியாக குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி தலைமையிலான தரைப்படை மாவிலாறு அணையை கைப்பற்ற நகர்ந்து வருகிறது. தரைப்படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். நேற்று அவர்கள் நடத்திய தாக்குதலில் 40 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
மாவிலாறு அணையை மீட்க படையினர் “மிசன் வோட்டர் செட்” என்ற பெயரில் மும்முனை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகளின் திரி கோணமலை பகுதி அரசியல் பிரிவு பொறுப்பாளர் எழிலன் கூறுகையில், “எங்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து விமானப்படை மூலம் தாக்குகிறது. எனவே நாங்களும் போரை தொடங்கி விட்டோம்” என்று கூறி உள்ளார்.
அதன் முதல்படியாக நேற்றிரவு 10.30 மணிக்கு விடுதலைப்புலிகள் படைகள் மீது திடீர்தாக்கு தல் நடத்தினார்கள். தரைப்படைக்கு உதவ ஒரு ராணுவ பஸ்சில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். சேருறுவரகந்தனாய் சாலையில் அந்த பஸ் சென்று கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினார்கள்.
ராணுவ பஸ், தூள், துளாக சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 18 ராணுவவீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். விடுதலைப்புலிகள் தாக்குதல்களை சமாளிக்க திரிகோணமலை பகுதிக்கு கூடுதல் வீரர்களை இலங்கை அனுப்பி உள்ளது. இவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திரிகோணமலை தமிழர் கிராமங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே விமான குண்டு வீச்சை தீவிரப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கு விடுதலைப்புலிகளும் வேறு வழிகளில் பதிலடி கொடுக்க உஷாராக இருக்கிறார்கள். ராணுவம் தாக்குதலை நிறுத்தாவிட்டால், இலங்கையில் மீண்டும் மிகப்பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.