3 மாத ஆண் குழந்தையை ரூ.13 லட்சத்துக்கு விற்ற தந்தை..!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசெல்லா பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கும் நந்தியாலா பகுதியை சேர்ந்த உசேன்பி என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. உசேன்பி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பிரசவத்துக்கு சென்ற அவர் நந்தியாலா பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார். அப்துல்லாவுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மதுகுடித்துவிட்டு உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்தார். பிறரிடம் கடன் வாங்கி அவர் செலவு செய்தார். இதனால் கடன் தொகை அதிகரித்தது. அவரால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை.
உல்லாச வாழ்க்கையையும் அனுபவிக்க முடியவில்லை. இதனால் தனது 3 மாத ஆண் குழந்தையை விற்றுவிட முடிவு செய்தார்.
இதற்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்த மனைவியையும், குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்தார். குழந்தையை கடைக்கு அழைத்து செல்கிறேன் என்று தூக்கி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நூண பள்ளி பகுதியை சேர்ந்த ஜாபர் என்பவருக்கு ரூ.13 லட்சத்துக்கு குழந்தையை விற்றார். அந்த பணத்தை உல்லாசமாக செலவிட்டார்.
குழந்தையுடன் சென்ற கணவர் 2 நாட்களாக வீடு திரும்பாததால் உசேன்பி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூண பள்ளி பகுதிக்கு சென்று குழந்தையை மீட்டனர்.
குழந்தையை விலைக்கு வாங்கிய ஜாபரை கைது செய்தனர். அப்துல்லா தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating