பிறந்தநாள் விழாவில் நடந்த இரட்டை கொலையில் வாலிபர் சிக்கினார்: தலைமறைவு கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு…!!
இரணியலை அடுத்த வடக்கு நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 35), தச்சு தொழிலாளி. இவரது மகனுக்கு நேற்று முதல் பிறந்தநாள் நடக்க இருந்தது. இதற்காக நண்பர்கள் ஸ்ரீகுமார், சசிகுமார், சந்திரன் மற்றும் உறவினர்களை விருந்துக்கு அழைத்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த நண்பர்கள் மறுநாள் விருந்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
இதற்காக காய்கறிகள் வெட்டிக் கொண்டிருந்த போது சத்தம் போட்டு பேசி சிரித்தனர். இது இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டில் வசித்த விஜி (26) என்பவர் சத்தம் போட்டார். அவர், ராஜனிடமும் அவரது நண்பர்களிடமும் வாக்குவாதம் செய்தார். பிரச்சினை முற்றியதில், அவர்களுக்கிடையே கை கலப்பு மூண்டது.
இதில் ஆத்திரமடைந்த விஜி நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் ராஜன் வீட்டிற்கு மீண்டும் சென்றார். அவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீகுமார் பலியானார். காயமடைந்த சசிகுமார், ராஜன், சந்திரன் ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பிறந்தநாள் விழா தகராறில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
இரணியல் இரட்டை கொலை பற்றி குளச்சல் டி.எஸ்.பி. வெங்கட்ராமன், இன்ஸ்பெக்டர் அரிகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே ஸ்ரீகுமார் மற்றும் ராஜனிடம் தகராறு செய்த விஜியும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தன்னை ராஜன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதால் படுகாயம் அடைந்ததாக கூறினார். தகவல் அறிந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விஜியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் விஜியுடன் 5–க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ராஜன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியது தெரிய வந்தது. இவர்களில் முக்கிய நபர் ஒருவர் போலீசார் பிடியில் சிக்கினார். மற்றவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் கேரளா மற்றும் மதுரைக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளா மற்றும் மதுரைக்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே கொலையுண்ட ஸ்ரீகுமார் மற்றும் சசிகுமார் ஆகியோரின் உடல்கள் இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக அங்கு கொலையுண்டவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபோல கொலை நடந்த வடக்கு நுள்ளிவிளை பகுதியிலும் அதிரடி போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
Average Rating