வாணியம்பாடியில் முட்புதரில் வீசிய குழந்தையை வாங்க மறுத்த தாய்: அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்பு…!!
வாணியம்பாடி சி.எல். சாலையில் ஓம்சக்தி கோவில் அருகே உள்ள பாலாற்றின் கிளையாற்றில் நேற்று முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண்குழந்தை மீட்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை கைப்பற்றி வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அமுதா (வயது 28) பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 12-ந் தேதி சேர்ந்து இருப்பதும், அங்கு அவருக்கு அன்றே பெண் குழந்தை பிறந்துள்ளதும் தெரியவந்தது.
மேலும் அன்று இரவே யாருக்கும் தெரியாமல் அமுதா ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை அமுதாவுக்கு பிறந்த குழந்தையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
மேலும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியும் வாணியம்பாடி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் ஆஸ்பத்திரியில் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்ட அமுதா, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென காணாமல் போய்விட்டார் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் போலீசார் அமுதாவை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், கணவர் தன்னை விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டதால் தோல் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும் அப்போது ஒருவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பில் கர்ப்பம் ஆனதால் ஆஸ்பத்திரியில் சேர்ந்து குழந்தை பெற்றதாகவும், குழந்தையை கொல்ல மனமின்றி புதரில் விட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே தனது கணவருடன் வாழ்ந்த போது 2 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களை வளர்க்கவே சிரமப்படுகிறேன். 3-வதாக இந்த குழந்தையை என்னால் எப்படி வளர்க்க முடியும் எனக் கூறி குழந்தையை வாங்க மறுத்தார்.
இதனையடுத்து தாயின் ஒப்புதலுடன் பச்சிளம் குழந்தை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating