அலங்காநல்லூரில் இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை: குடும்ப தகராறில் கணவன் வெறிச்செயல்..!!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நல்லமநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது38), காய்கறி வியாபாரி. இவரது மனைவி பாலநாகம்மாள் (31). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியபோது ஆவேசமடைந்த மகேஸ்வரன், வீட்டில் இருந்த கயிற்றால் பாலநாகம்மாளின் கழுத்தை நெரித்தார். உடனே மயங்கி கீழே விழுந்த பாலநாகம்மாள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். மனைவி இறந்து விட்டதை அறிந்த மகேஸ்வரன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் குருரெங்கராஜ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் கொலையுண்ட பாலநாகம் மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவான மகேஸ்வரனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்வம் அலங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating