சபரிமலை கோவிலுக்கு ஆண் வேடமிட்டு சென்ற (18) வயது தமிழக பெண்..!!
ஆண் வேடமிட்டு சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற தமிழக பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்களை தவிர பெண்கள் யாரும் செல்லக்கூடாது என்பது மரபு.
இங்கு குடி கொண்டுள்ள அய்யப்பன் பிரமச்சாரி என்பதால் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரையும் கோவில் நிர்வாகம் சன்னிதானத்திற்கு அனுமதிப்பதில்லை. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்றக்கோரி இளம் வக்கீல் சங்கத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனை விசாரித்த கோர்ட்டு, கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து அரசிடம் விளக்கம் கேட்டது. அரசும் பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்கள் போலீசார் மற்றும் கோவிலின் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இவர்களின் கண்களில் இருந்து தப்பி கோவிலுக்குள் நுழைந்து விட அவ்வப்போது பெண்கள் சிலர் முயற்சி செய்வதுண்டு. ஆனால் அவர்களும் ஏதோ ஒரு வழியில் பாதுகாவலர்களிடம் சிக்கி கொள்வார்கள். அந்த வகையில் நேற்று மாலை 7 மணி அளவில் பேண்ட், சட்டை அணிந்த நபர் ஒருவர் கோவிலுக்கு வந்தார்.
பம்பை பகுதியில் அவர் நடந்து சென்றபோது பாதுகாப்பு அதிகாரிகளின் கண்ணில் பட்டார். அந்த நபரின் நடவடிக்கைகள் சந்தேகமாக இருந்ததால் பாதுகாவலர்கள் அவரை ரகசியமாக பின் தொடர்ந்தனர். பம்பையில் இருந்து அவர் சபரிமலைக்குள் நுழையும்போது, பாதுகாவலர்கள் போலீஸ் உதவியுடன் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போதுதான் அந்த நபர் ஆண் மகன் இல்லை என்பதும், இளவயது பெண் எனவும் தெரிய வந்தது. கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக மொட்டை அடித்து ஆண் வேடம் தரித்து கோவிலுக்கு வந்ததை பாதுகாவலர்கள் கண்டுபிடித்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரித்த போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா என்ற லெட்சுமி எனவும், 18 வயது ஆனவர் எனவும் தெரிய வந்தது.
கோவில் பாதுகாவலர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி கோவிலின் நடைமுறைகளை எடுத்துரைத்து திருப்பி அனுப்பினர்.
இந்த சம்பவம் நேற்று சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது
Average Rating