கற்பழிப்பால் கர்ப்பமுற்ற சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய ஐகோர்ட் அனுமதி..!!
குஜராத் மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவத்தில் கர்ப்பமுற்ற 14 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 22 வாரக் கருவை சட்டரீதியாக கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்க்கோட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை 21 வயது வாலிபர் கற்பழித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் குற்றவாளியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவத்தால் அந்த சிறுமி கர்ப்பமுற்றிருந்ததை அறிந்த அவரது பெற்றோர், தேவையற்ற அந்த கருவை சட்டரீதியாக கலைத்துவிட அனுமதி அளிக்குமாறு ராஜ்கோட் மாவட்ட கோர்ட்டில் மனு செய்திருந்தனர்.
ஆனால், சட்டப்படி 20 வாரங்களை கடந்துவிட்ட கருவை கலைக்க அனுமதி அளிக்க முடியாது என கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து, தலைநகர் அகமதாபாத்தில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோனியா கோக்கானி, மருத்துவர்களின் அறிக்கையின்படியும், பாதிக்கப்பட்ட சிறுமி இந்த வயதில் ஒருகுழந்தைக்கு தாயாகி சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய இன்னலை கருத்தில் கொண்டும் இந்த கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
தற்போது அந்த சிறுமியின் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் 6.5 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவில் இருப்பதால் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவளது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்தபின் கருக்கலைப்பு செய்யலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்
Average Rating