யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்தார்…!!
இலங்கையில் தமிழர்கள் பகுதியான யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது.
இலங்கை போரின் போது இந்த விளையாட்டு அரங்கம் சேதமானது. இதனால் 1997-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரூ.7 கோடியில் இந்த விளையாட்டு அரங்கம் இந்திய அரசால் புனரமைக்கப்பட்டது. இதில் 1,850 பேர் அமரும் வகையில் இட வசதி அமைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கம் இன்று திறக்கப்பட்டது.
இலங்கை அதிபர் சிறிசேனா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரசிங் மூலம் இந்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். விழா நிகழ்ச்சிகளையும் அவர் டெல்லியில் இருந்தவாறே பார்த்தார். அவருடன் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜூவும் உடன் இருந்தார்.
விளையாட்டு அரங்கத்தை தொடங்கி வைத்து மோடி பேசியதாவது:-
துரையப்பா விளையாட்டு அரங்கம் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகும். இது நமது ஒருங்கிணைப்புக்கு புது உத்வேகம் அளிக்க கூடியதாகும் கலை, கலாச்சாரம், மொழி ஆகியவற்றில் இந்தியா இலங்கை இடையே நட்புறவு நிலவுகிறது.
இலங்கை மக்களுடன் ஒன்று கூடி விழா கொண்டாடுவதால் இன்றைய தினம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஐ.நா.வின் யோகா தின தீர்மானத்துக்கு முதலில் ஆதரவு அளித்தது இலங்கை தான். இலங்கையின் முன்னேற்ற பாதையில் இந்தியா கை கோர்த்து நிற்கும்
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக இலங்கை அதிபர் சிறிசேனா பேசியதாவது:-
இலங்கையில் விளையாட்டு அரங்கம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இதன் மூலம் இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும்.
இந்த விளையாட்டு அரங்கத்திற்கு நிதி உதவி அளித்து உதவிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்க திறப்பு நிகழ்ச்சிகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் நடத்தப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கில் முதல் பெரிய நிகழ்ச்சியாக 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை புரிந்தனர்.
Average Rating