விபத்தில் முதுகு தோலை இழந்தவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் போது வாலிபர் பலி…!!
வடபழனியை சேர்ந்தவர் சபரிஷ். 23 வயது என்ஜினீயரான இவர் கடந்த 8-ந்தேதி அண்ணா சாலையில் சென்ற போது விபத்துக்குள்ளானார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு காரின் கதவு திடீரென திறந்ததால் அதில் மோதி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் மாநகர பஸ் அடியில் சிக்கி 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார்.
படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அண்ணா சாலை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விபத்தில் சபரிசின் முதுகு பகுதியின் தோல் முழுவதையும் இழந்து இருந்தார். இதை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.
இந்த நிலையில் சபரிஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் திடீரென இறந்து போனதாக டாக்டர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் போது அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்கள் அலட்சிய போக்கால் தங்களது மகன் இறந்து போனதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது காயம் அடைந்தவர் விபத்தில் இறந்தாரா? அல்லது சிகிச்சையின் போது ஏற்பட்ட கவனக் குறைவா? என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனையின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.
Average Rating