2 மகள்களின் வாழ்க்கையை சீரழித்ததால் மருமகனை கூலிப்படை ஏவி கொன்ற மாமனார்…!!
திருப்பத்தூர் அருகே உள்ள தாயப்பநகரை சேர்ந்தவர் அருள் (வயது42). கார்பெண்டர். ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சுமதி.
சுமதியின் தங்கை சாந்தியுடன் அருளுக்கு தொடர்பு ஏற்பட்டது. சாந்தியையும் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அருளுடன் ஏற்பட்ட தகராறில் 2 மனைவிகளும் தாய் வீட்டிற்கு சென்று விட்டனர். 2 மகள்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக அருள் மீது மாமனார் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர்.
மேலும் அருளுக்கு ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டது. சீட்டு பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 6 பேர் கொண்ட கும்பல் அருளை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அருள் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில், மாமனார் கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். அருளை ஆள் வைத்து தீர்த்து கட்டியதை அவர் ஒப்புக் கொண்டார்.
கிருஷ்ணன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
தனது 2 மகள்களையும் அருள் திருமணம் செய்தார். காரணம் இல்லாமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததால், 2 மகள்களும் அருளை பிரிந்தனர். மகள்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியதால், அருளை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதற்காக கூலிப்படை உதவியை நாடினேன். சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கூலிப்படையுடன் காத்திருந்தேன். அதன்படி, அருளை அடித்து கொலை செய்தேன்.
தற்போது போலீஸ் விசாரணையில் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி, கூலிப்படையை சேர்ந்த அசோக்குமார் (29), சந்தோஷ்(22), ஜீவானந்தம்(27), முருகன்(22), விஜய்(23) ஆகிய 5பேரை கைது செய்தனர். கொலையாளிகள் 6பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating