குலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற வாலிபர்: குடிபோதையில் வெறிச்செயல்..!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபுஷ்பம் (வயது26). இவரும் உடன்குடி அருகே உள்ள பள்ளக்குறிச்சியை சேர்ந்த காசிலிங்கம் மகன் நவீன்குமார் (28) என்பவரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது. தொடர்ந்து காதல் ஜோடியை அவர்களது உறவினர்கள் அழைத்து வந்து கடந்த 15.11.2015 அன்று பேச்சுவார்த்தை நடத்தி கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பின்னர் நவீன்குமார் மனைவியுடன் குலசேகரன்பட்டினம் கோவில் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கோவில் முன்பு பழக்கடையும் நடத்தி வருகிறார். தற்போது ராஜபுஷ்பம் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் நவீன்குமார் வீடு திறக்கப்படவில்லை. இதனால் ராஜபுஷ்பத்தின் தந்தை முருகேசன் மகள் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு ராஜபுஷ்பம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முருகேசன் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் ராஜபுஷ்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில நாட்களாக நவீன்குமார் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததும், இன்று காலை ஏற்பட்ட தகராறில் நவீன்குமார், ராஜபுஷ்பத்தை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவானதும் தெரிய வந்தது.
தலைமறைவாக உள்ள நவீன்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நவீன்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating