குஜராத் மாநிலத்தில் மாணவியை கற்பழித்த பா.ஜனதா தலைவர்…!!
குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவர் ஜெயேஷ் பட்டேல். (வயது 66). இவர் வதோதராவில் பரூல் என்ற நிகர்நிலை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார்.
இங்கு நர்சிங் பட்டப்படிப்பு படித்த 22 வயது மாணவி ஒருவரை ஜெயேஷ் பட்டேல் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அந்த மாணவியை விடுதி நிர்வாகி பாவனா, ஜெயேஷ் பட்டேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை ஜெயேஷ் பட்டேல் கற்பழித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஜெயேஷ் பட்டேல் மற்றும் பாவனா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக வதோதரா மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் திலுபா ஜட்சுமா கூறும் போது, ஜெயேஷ் பட்டேல் மீது புகார் வந்ததை அடுத்து நாங்கள் அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம் என்று கூறினார்.
ஜெயேஷ் பட்டேல் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2 தடவை அந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.
இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating