திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்தளத்தின் மீது கடும் தாக்குதல்கள்-பலர் பலி
இலங்கையின் கிழக்கே திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இன்று பாரிய தாக்குதல் நடத்தியதாக இலங்கை ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது. துருப்புக் காவி கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைய முற்பட்ட சமயத்தில் விடுதலைப் புலிகள் அதைத் தாக்க முயன்றதாகவும், கடற்படை பதில் தாக்குதல் நடத்தியதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் கடற்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட முப்பது பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கடும் எறிகணைச் சமரில் ஈடுபட்டதாகவும் இதனால் திருகோணமலை நகரில் பெரும் பதட்டம் நிலவியதாகவும், சிலர் பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்குச் சென்றதாகவும் உள்ளூர்ச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டினை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இலங்கை ராணுவத் தரப்புப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.