இரட்டைக் குழந்தையை பெறவிருந்த தாய் விபத்தில் சிக்கினார்: மூவரின் உயிரையும் காப்பாற்றும் டாக்டர்களின் முயற்சி தோல்வி – பலத்த காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி…!!
தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இரு குழந்தைகளை பிரசவிக்கவிருந்த 20 வயதான கர்ப்பிணித் தாய் விபத்துக்குள்ளாகி இரு குழந்தைகளுடன் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி பொசன் தினத்தினை முன்னிட்டு தான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இத் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தெஹியத்தகண்டிய தொலகந்த பிரதேசத்தில் வேகமாக வந்த முச்சக்கரவண்டியொன்று குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி தாயுடன் இரட்டை குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்திருந்தனர்.
தெஹியத்தகண்டிய துவாரகல பிரதேசத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியான நிரோஷனி ராஜபக்ஷ(20) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் அவரது கணவரான டீ.எம். தனுஷ்க மதுசங்க(22), பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தெஹியத்த கண்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை யில் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating