மலைச்சிங்கத்தின் வாயில் அகப்பட்ட 5 வயது மகனை போராடி காப்பாற்றிய பெண்…!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் சிங்கமொன்றிடம் அகப்பட்ட தனது 5 வயதான மகனை, அச்சிங்கத்துடன் போராடியதன் மூலம் காப்பாற்றியுள்ளார்.
கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த இப்பெண், தனது வீட்டுக்கு அருகில் மலைச்சிங்கம் ஒன்று தனது மகனை கடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அச்சிறுவன் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல் தடுமாறினான். அவ்வேளையில் அச்சிறுவனின் தலை முழுவதும் மேற்படி சிங்கத்தின் வாய்க்குள் இருந்தது.
எனினும், அப்பெண் பின்வாங்கவில்லை. மாறாக அம்மிருகத்துடன் போராடி அவர் தனது மகனை காப்பாற்றினார்.
அந்த மலைச்சிங்கத்தின் வாயை பலவந்தமாக திறந்து தனது மகனை அப்பெண் விடுவித்துள்ளார். அவர் ஒரு ஹீரோ என பொலிஸ் அதிகாரியான மைக்கல் பக்லியோன் தெரிவித்துள்ளார்.
மேற்படி சிறுவனின் தலை, முகம், கழுத்துப் பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டிருந்தன. பின்னர் அவன் ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு டென்வர் நகரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டான்.
அவனின் தாய்க்கும் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலராடோ மாநிலத்தில் சுமார் 4500 மலைச்சிங்கங்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு 1,990 ஆம் ஆண்டிலிருந்து இச்சிங்கங்களினால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
Average Rating