காளஹஸ்தி அருகே இளம்பெண்ணை அடித்து கொன்று செயின் பறிப்பு…!!
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த நாகலாபுரம் கோட்டை தெருவை சேர்ந்தவர் மோகன், விவசாயி. இவருடைய மனைவி கோகிலா (வயது 24). அவர், நேற்று முன்தினம் மாலை நாகலாபுரம் பைபாஸ் சாலை ஓரம் தனக்குச் சொந்தமான உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர், தங்களிடம் இருந்த ஆயுதங்களால் கோகிலாவை தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டனர். அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். அவரின் கழுத்தில் கிடந்த தங்கத்தாலி மற்றும் மற்றொரு சங்கிலி என மொத்தம் 8 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
விவசாய நிலத்துக்கு சென்ற கோகிலா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர், அவரை தேடி விவசாய நிலத்துக்குச் சென்றனர். அங்கு கோகிலா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிணத்தை வீட்டுக்குத் தூக்கி வந்து வைத்து விட்டு, மோகன் நாகலாபுரம் போலீசுக்கு சென்று புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோகிலாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியவேடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசுக்குத் தகவல் தெரியாமல் பிணத்தை வீட்டுக்குத் தூங்கி வந்ததால் மோகனை, போலீசார் எச்சரித்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக நாகலாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating