புழலில் வக்கீல் கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது…!!
சென்னை புழலில் ஐகோர்ட்டு வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
சென்னை புழல் அருகே உள்ள காவாங்கரை வாகன சோதனைச்சாவடி பின்புறம் உள்ள சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்தவர் அகிலன் என்ற அகில்நாத் (வயது 32). இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
கடந்த 16-ந் தேதி காலை வீட்டின் அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்த அகில்நாத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக புழல் காவாங்கரையைச் சேர்ந்த விஜயகுமார், விக்னேஷ், தினேஷ், பாலாஜி, குமார், வேலு ஆகிய 6 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான புழல் சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்த சந்திரகுமார், ஊத்துக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்த விஜயகுமார் உள்ளிட்ட 6 பேரையும் காவலில் எடுத்து வக்கீல் அகில்நாத் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் 6 பேரையும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி புழல் இன்ஸ்பெக்டர் சிவபாலன், செங்கல்பட்டு கோர்ட்டில் நேற்று அனுமதி கோரினார். மாஜிஸ்திரேட்டு சுபாஷினி, 6 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். விசாரணை முடிந்து வருகிற திங்கட்கிழமை மீண்டும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கு தொடர்பாக புழல் காவாங்கரை வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சுமன்(22), காவாங்கரை சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்த பவித்ரன்(21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரோசம்மாள்(59) ஆகிய 3 பேரை நேற்று புழல் இன்ஸ்பெக்டர் சிவபாலன் கைது செய்தார்.
பின்னர் கைதான 3 பேரையும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.
Average Rating