தூக்கில் தொங்கி உயிரிழந்த ஹட்டன் இளைஞனின் மரணத்தில் சந்தேகம்…!!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் என்ற இளைஞர் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் அங்கு 23.06.2016 அன்று தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் சிறுவயதிலிருந்து டிக்கோயா இன்வெறி தோட்டத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளான். இவனின் பெற்றோர்களான தந்தை பத்மநாதன், தாயான செல்வசுந்தரி ஆகியோர் தொழில் நிமிர்த்தம் கொழும்பில் வேலை செய்கின்றனர்.
பாட்டியுடன் வாழ்ந்த குறித்த இளைஞன், மேற்படி தோட்டத்தில் உள்ள நபர் ஒருவரினால் பாட்டியின் விருப்பத்துடன் தொழிலுக்காக கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தொழிலுக்கு சென்ற சம்பவம் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
இவ் வேளையில் கடந்த 22ம் திகதி, குறித்த இளைஞனுக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக கொழும்புக்கு வருமாறு வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பாட்டிக்கு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 23ம் திகதி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும், சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞனின் சித்தப்பாவிற்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் கொழும்பு சென்ற போது அங்கு எவ்வித விசாரணகளும் மேற்கொள்ளாமல் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் சரியாக தெரியாத காரணத்தினால் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கும் உறவினர்கள், இது தொடர்பாக நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது இவர்களின் புகாரை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அத்தோடு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் இன்று (25) டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இளைஞனின் மரணம் குறித்து தோட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதோடு, மரணம் தொடர்பான உரிய விசாரணை நடத்தி தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் கோருகின்றனர்.
Average Rating