48 மணி நேர இடைவெளிக்குப்பிறகு இஸ்ரேல் விமான குண்டுவீச்சு மீண்டும் தொடங்கியது: 2 கிராமங்கள் தரைமட்டம்
இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் லெபனான் மீது குண்டு வீச்சை தொடங்கியது. பீரங்கி படையும் லெபனானுக்குள் நீண்ட தூரம் ஊடுருவி 2 கிராமங்களை குண்டுவீசி அழித்தது. லெபனான் மீது இஸ்ரேல் கடந்த மாதம் 12-ந்தேதி தாக்குதல் நடத்தியது. பெய்ரூட் உள்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் லெபனானின் விமான நிலையங்கள், வாகனங்கள், சாலைகள், துறைமுகங்கள் தகர்க்கப்பட்டன.
கடந்த 2 நாட்களுக்கு முன் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் அப்பாவி குழந்தைகள் 40 பேர் உள்பட 52 பொதுமக்கள் ஒரே நாளில் பலியானார்கள். இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு விமான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் குண்டு வீச்சை தொடங்கி விட்டன. மத்திய தரைகடல் பகுதியை ஓட்டியுள்ள மலைப்பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. 4.5 நிமிடம் இந்த தாக்குதல் நீடித்தது. 20 தடவை விமானங்கள் வட்டமடித்து பறந்து குண்டுகளை வீசின. தபார்கிலா கிராமங்களில் உள்ள கட்டிடங்கள் இதில் தீ பிடித்து எரிந்தன.
இஸ்ரேல் பீரங்கி படை லெபனான் எல்லையை தாண்டி பீர் நீமாஸ், ஹோலா ஆகிய பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன. லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் முகாம்கள் அழிக்கப்பட்டன. அந்த 2 கிராமங்களும் அழிந்து தரைமட்டமானது.
ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் ஏவுகணைகளை வீசி எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 20 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் ஒரு டாங்கி ஏவுகணை வீசி தாக்கப்பட்டது.
காலை இஸ்ரேல் பதரைப் படையினர் ஒரு ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அந்த ஆஸ்பத்திரியை சுற்றிவளைத்து எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 7 பொது மக்கள் பலியானார்கள்.
ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் சில வீரர்கள் இதில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.