இஸ்ரேல் ராணுவம் முன்னேறாதபடி தடுத்து விரட்டி அடித்துவிட்டோம் – ஹிஸ்புல்லா
தெற்கு லெபனான் பகுதிக்குள் இஸ்ரேலிய ராணுவம் முன்னேறிவிடாதபடி தடுத்து, விரட்டி அடித்துவிட்டோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு செவ்வாய்க்கிழமை காலை அறிவித்தது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆயுதம் ஏந்திய அமைப்பான ஹிஸ்புல்லா இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. “ஐதா அல் சாப், அல் கவோசா, ரமி ஆகிய கிராமங்களை ஒரே நேரத்தில் கைப்பற்றும் முயற்சியை இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை திங்கள்கிழமை இரவு தொடங்கியது.
ஆனால் நாங்கள் உறுதியாக நின்று அதன் முயற்சியை முறியடித்தோம். எங்களுடைய தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் பகுதிக்கு திரும்ப ஓடிவிட்டார்கள் என்று ஹிஸ்புல்லாவின் அறிக்கை பெருமிதம் பொங்க தெரிவிக்கிறது.
ஐதா அல் சாப் என்ற இடம் லெபனானின் எல்லைக்கு மிக அருகில் இருக்கிறது. இங்கிருந்துதான் ஹிஸ்புல்லாவினர் கடந்த ஜூலை 12-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து 8 இஸ்ரேல் வீரர்களைக் கொன்று, 2 வீரர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திக்கொண்டு வந்தனர். இதை அடுத்துத்தான் இந்த மோதலே வெடித்தது.
இந்த இடத்திலிருந்து, இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி வருகின்றனர். எனவே இந்த இடத்தைக் கைப்பற்றுவதன் மூலம் ஹிஸ்புல்லாவைச் சிதறடிக்க முடியும் என்று இஸ்ரேல் ராணுவம் கருதுகிறது. ஆனால் ஹிஸ்புல்லாவின் பதிலடி தாக்குதைலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இப்போதைக்கு பின் வாங்கியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்துக்கு ஆதரவாக ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், பீரங்கிகள், டாங்குகள் களத்தில் இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்கின்றனர் ஹிஸ்புல்லா அமைப்பினர்.