மதுரா கலவரம்: முக்கிய குற்றவாளி மனைவியுடன் கைது…!!
உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் கடந்த 2-ம் தேதி தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை கோர்ட் உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முழு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. தற்போது, மதுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முன்னூறுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரா கலவரத்துக்கு காரணமான ராம் விருகாஷ் யாதவ் என்பவர் இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட நிலையில் அவரது வலதுகரமாக இருந்த சந்தன் போஸ் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய போலீசார் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
பஸ்தி மாவட்டத்தில் உள்ள சைத்வாலியா கிராமத்தில் ஒருவீட்டில் மறைந்திருந்த சந்தன் போஸ் மற்றும் அவரது மனைவியை கடந்த 16-ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் ராம் விருகாஷ் யாதவின் மூத்த மெய்காவலராக இருந்த விரேஷ் யாதவ் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
துப்பாக்கி சுடுவதில் வல்லவரான விரேஷ் யாதவ், ஜவஹர் பாக் பகுதியில் வசித்துவந்த பல வாலிபர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து, போலீசாரை தாக்க தயார்படுத்தி வந்ததாக தெரியவந்தது. இந்நிலையில், கொத்வாலி காவல் நிலைய எல்லைக்குள் விரேஷ் யாதவ் இன்று கைது செய்யப்பட்டதாக மதுரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
Average Rating