பழனி அருகே மலையில் தியானம் செய்த 2 வாலிபர்கள் உயிரிழப்பு
பழனி அருகில் உள்ள ஆயக்குடி 6–வது வார்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமகிருஷ்ணன் (வயது 37). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கொய்யாப்பழ வியாபாரம் பார்த்து வந்தார். இவரது நண்பர் ஆறுமுகம் மகன் ராஜகுமார் (26). கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.
இருவரும் ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்கள். பழனியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பொன்னிமலைக்கரடு என்ற மலைப் பகுதியில் தியானம் செய்ய செல்வது வழக்கம். இப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுவதால் பழனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் இங்கு வந்து தியானம் செய்து செல்கின்றனர்.
நேற்று காலையில் ராமகிருஷ்ணன் ராஜகுமாருடன் தியானம் செய்ய மலைக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். இரவு வரை வீடு திரும்பவில்லை. இன்று காலையிலும் அவர் வீட்டுக்கு வராததால் அவரது மொபைல் போனுக்கு மனைவி போன் செய்தார். அது ஸ்விட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதே போல் ராஜகுமாரின் போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த இரு வீட்டாரும் பொன்னிமலைக்கரடு மலைக்கு சென்றனர். அங்கிருந்த மண்டபத்தில் தியான நிலையிலேயே இருவரும் இறந்து கிடந்தனர். உடலில் எந்தவித காயங்களும் இல்லை. அவர்கள் தியான நிலையிலேயே இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்களது உறவினர்கள் தெரிவிக்கையில் ராமகிருஷ்ணனும், ராஜகுமாரும் அடிக்கடி கூடு விட்ட கூடு பாயும் வித்தை பழகி வருவதாகவும் இதில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் கூறி வந்தனர்.
எனவே அது போன்ற பயிற்சியில் ஈடுபட்ட போது உயிரிழந்தார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating