திருச்செந்தூர் அருகே காதல் கணவர் வீட்டின் முன்பு பெண் வக்கீல் 2–வது நாளாக போராட்டம்
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டினம் சாந்திநகரை சேர்ந்தவர் வள்ளி நாயகம். இவரது மகன் சத்தியகுமார் (வயது 30). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
திருச்சி காஜாமலை டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் ரசாக்.இவரது மகள் பர்ஜானா பேகம் (30). இவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரும் சத்தியகுமாரும் கடந்த 2009–ம் ஆண்டு ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பர்ஜானா பேகம் சென்னையில் சட்டப்படிப்பு படிக்க சென்றிருந்தார். இதற்கிடையே கடந்த 2011–ம் ஆண்டு சத்தியகுமார் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில் பர்ஜானா பேகம் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கணவரின் வீட்டில் சேர்ந்து வாழுமாறு பர்ஜானா பேகத்திற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று காலையில் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள கணவரின் வீட்டிற்கு வக்கீல் பர்ஜானா பேகம் வந்தார். உடனே சத்தியகுமார் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். எனவே பர்ஜானா பேகம் தனது கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று 2–வது நாளாக பர்ஜானா பேகம் தனது கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:–
திருச்சியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சத்தியகுமார் வேலை பார்க்கும் போது அவரை நான் சந்தித்தேன்.பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டோம். இதற்கிடையே நான் சட்டபடிப்பிற்காக சென்னைக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் எனக்கு தெரியாமல் வெறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நான் கோர்ட்டு உத்தரவுபடி போராடி வருகிறேன். என்னை எனது மாமனார், மாமியார் ஏற்க மறுத்து விரட்டி விடுகின்றனர். கணவரை என்னுடன் சேர்த்து வைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண் வக்கீலின் இந்த போராட்டத்தால் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating