அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை மாயமான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம்…!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மனம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி. இவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை மாயமானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குழந்தையை கண்டுபிடித்து தருமாறு மதுரை ஐகோர்ட்டில் மீனாட்சி மனு செய்தார். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.
இந்த வழக்கு ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு வந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு காரணங்களை கூறி வந்தனர். மேலும் கண்டு பிடிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு மர பணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்து வந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், கோகுல்தாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் குழந்தையை கண்டுபிடிக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மாயமான குழந்தையை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இன்னும் 4 வார காலம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் குழந்தையை கண்டுபிடித்து ஆஜர்படுத்தாவிட்டால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என கண்டிப்புடன் தெரிவித்தனர்.
Average Rating