மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்க்கு 3 ஆயுள் தண்டனை…!!
வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெரினா. இவருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். ஜெரினாவின் கணவர் மரணம் அடைந்த பின்னர், ஜெரினாவுக்கும் உத்தரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெரினாவையும், அவரது மூன்று குழந்தைகளையும் குப்பையநல்லூர் கிராமத்துக்கு அழைத்துவந்து குடும்பம் நடத்தியுள்ளார் அருள்.
இந்நிலையில் 2013ம் ஆண்டு ஜெரினா, அருள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மூன்று குழந்தைகளையும் கணவர் குடும்பத்தாரிடம் விட்டுவரும்படி அருள் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெரினா, வீட்டருகே இருந்த கிணற்றில் 3 குழந்தைகளையும் வீசியதுடன் தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்துவிட்டன. உயிருக்குப் போராடிய ஜெரினாவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றதாக ஜெரினா மீது உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் ஜெரீனா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குழந்தைகளை கொன்ற ஜெரினாவுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Average Rating