மாதவரத்தில் தனியார் கல்லூரியில் ரூ.6 லட்சம் திருடிய ஊழியர் கைது…!!
சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் சாலையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணிபுரியும் காசாளர் ஞானபிரகாசி (வயது 44) மாதவரம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அதில் அவர், ‘கல்லூரி வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் இருந்த ரூ.5 லட்சத்து 98 ஆயிரம் பணத்தை காணவில்லை. பணம் இருந்த காசாளர் அறை கதவின் பூட்டை உடைத்து யாரோ அந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர்’ என கூறி இருந்தார்.
அதன்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். முதல் கட்டமாக கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில், பணத்தை திருடியது அதே கல்லூரியில் உதவி காசாளராக பணிபுரிந்து வந்த சென்னை பாரிமுனை பரமானந்த கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பது தெரிந்தது.
கடந்த ஒரு ஆண்டாக அந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் கார்த்திகேயன், கடந்த 4-ந் தேதி இரவு காசாளர் அறையின் பூட்டை உடைத்து பணம் வைத்து இருந்த பெட்டியில் இருந்து தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது.
கார்த்திகேயனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating