ஏமனில் விமானநிலையம் அருகே இரட்டை கார் குண்டு வெடிப்பு-துப்பாக்கி சண்டை: 26 பேர் பலி…!!
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவது அரசுப்படைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
கடற்கரை நகரான ஏடனில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அரசுப்படை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டது. விமான நிலையத்துக்கு மிக அருகாமையில் ராணுவ தளம் அமைந்திருப்பதால் விமான நிலையம் 24 மணி நேரமும் ராணுவ கண்காணிப்பில் உள்ளது. அரசுப்படையிடம் இருந்து அந்த விமான நிலையத்தை மீட்டு மீண்டும் தங்களது ஆதிக்கத்துக்குள் கொண்டு வர ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் விமான நிலையத்தை ஒட்டி உள்ள ராணுவ தளத்தின் நுழைவாயிலின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்கச் செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றொரு காரை ராணுவ தளத்துக்குள் ஓட்டி சென்று வெடிக்கச் செய்தனர்.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரட்டை கார்குண்டு வெடிப்பில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர். கார்குண்டு வெடிப்பை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் 20 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
Average Rating