சென்னையில் சிறுநீரக பாதிப்பால் படிப்பை தொலைத்த பள்ளி மாணவி: வாழ்க்கையோடு போராடும் பரிதாபம்…!!
சிறுநீரகம் நமது உடலில் முக்கியமான உறுப்பாகும். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதுதான் அதன் பணியாகும். மனித உடலில் உள்ள 2 சிறுநீரகங்களில், ஒன்று செயல் இழந்தாலும் இன்னொன்றை வைத்து உயிர்வாழ முடியும். ஆனால் இரண்டுமே செயல் இழந்து விட்டால்தான் சிக்கல். ஒன்று மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லையென்றால் அடிக்கடி ரத்தத்தை டயாலிசிஸ் (சுத்திகரிப்பு) செய்ய வேண்டும். அப்போதுதான் உடலின் இயக்கம் சீராக இருந்து கொண்டே இருக்கும்.
உணவு பழக்கவழக்கத்தால் இப்போது சிறுவயதிலேயே மாணவ-மாணவிகள் கூட கிட்னி பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக சிகிச்சைக்காக தனிபிரிவே உள்ளது.
இங்கு வயது வித்தியாசமின்றி பலரும் சிறுநீரக பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பவரின் 13 வயது மகள் கன்னியம்மாளுக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துள்ளன. 9-ம் வகுப்பு படித்து வரும் கன்னியம்மாள் சிறுநீரகம் செயல் இழந்து போனதால் படிப்பை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 6 மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவி கன்னியம்மாள் வீட்டில் இருந்த படியே டயாலிசிஸ் செய்து வருகிறார். தற்போது டாக்டர்கள் உடனடியாக மாற்று கிட்னி பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார் மாணவி கன்னியம்மாளின் தந்தை ரமேஷ் (99414 45910). என் மகளின் உயிரை காப்பாற்ற நல்ல மனசு படைத்தவர்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
குழந்தையாக கருவில் இருக்கும் போதே ஏதேனும் குறைபாடு இருந்து அதனை கவனிக்காமல் விட்டாலும் கிட்னி பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான டாக்டர் சவுந்தரராஜன்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, ‘சிறுநீரக அழற்சி, சிறுநீரகத்தில் உப்பு அதிகமாக சேர்வது, சிறுநீரில் புரதம் கலந்து வெளியேறுவது உள்ளிட்டவை சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணங்களாகும். இதுபோன்ற பாதிப்புகள் சிறுவயதில் ஏற்படாமல் இருக்க பள்ளிப் பருவத்தில் இருந்தே, உடல் பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம். அப்படி செய்தால் இது போன்ற பாதிப்புகளை தடுக்க முடியும்’ என்றார்.
Average Rating