வடக்கு மக்கள் இழந்துபோன உரிமைகள் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும்: ஜனாதிபதி…!!
வடக்கு மக்கள் இழந்துபோன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும் உதவிகளை ஊழல் மோசடிகளின்றி சரியாக முதலிடுவதற்கு எமது அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரம்பிக்கப்பட்டுள் செயற்திட்டங்களை உரியகாலத்தில் நியமங்களுக்கு ஏற்ப நிறைவு செய்வதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயத்துறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையின் சகல பிரதேசங்களுக்கும் சமனான முறையில் அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம்.
அதேவேளை, 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக வடக்கு மக்கள் இழந்துபோன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுமார் 50 வருட காலமாக இலங்கையுடன் சிறந்த தொடர்புகளை பேணிவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை இலங்கையின் அபிவிருத்திக்காக 7.9 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating