இலங்கை கடற்படை கப்பலுக்கு… -வைகோ
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கை தீவில் போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டே மீறி உள்ள இலங்கையின் இனவாத சிங்கள அரசு, தமிழர்கள் மீது தனது இனக்கொலை தாக்குதலை தீவிரப்படுத்த முப்படைகளையும் ஏவி உள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவி தமிழர்கள் குண்டுவீச்சால் கொல்லப்படுகின்றனர்.
தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் ஊடுருவக்கூடாது என்றும், தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் விடுதலைப்புலிகள் தெடர்ந்து செய்த எச்சரிக்கையை மீறி இலங்கை அரசு பீரங்கி தாக்குதலையும், குண்டுவீச்சையும் தொடர்ந்து நடத்துவதால் தமிழர் பகுதிகளையும், தமிழ் மக்களையும் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை இலங்கை அரசு தொடுத்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் இலங்கை காவல் துறையைச் சேர்ந்த 44 பேர்களுக்கு தமிழ் நாட்டில் கோவையில் மத்திய பாதுகாப்பு காவல் துறை தளத்தில் இந்தியா பயிற்சி கொடுக் கின்ற செய்தி அதிர்ச்சி ஊட்டுகின்றது. உடனடியாக இந்த பயிற்சி நிறுத்தப்பட்டு சிங்கள காவல் துறையினரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னாட்டு ஊடகங்களின் வாயிலாக கிடைத்து உள்ள நம்பகமான தகவல்களின்படி தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக 854 ஆயுதந்தாங்கிய சிங்கள துருப்பு களை ஏற்றிக் கொண்டு இலங்கை கடற்படை கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது என்ற செய்தியை நான் அறிகிறேன். அத்துடன் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், உதவி செய்யவும் இந்திய கடற்படையின் உதவியை நாடி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய பிரதமரிடம் பேசி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அப்படி ஏதாவது உதவியை இந்தியா இலங்கைக்கு செய்ய முற்பட்டால் அது மன்னிக்க முடியாத அக்கிரமமான செயல் ஆகும். தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் ராணுவ நடவடிக்கைக்கு துணை போகும் காரியமாகவே முடியும் என்பதை தெரிவிக்கிறேன். எனவே தமிழர்களுக்கு எதிராக அப்படிப்பட்ட கொடிய தவறினை இந்திய அரசு செய்ய முற்படாது என்று நம்புகிறேன்.
இந்தியர்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் உள்ள சிங்கள இனவாத குழுக்களால் ஆட்டுவிக்கப்படும் இலங்கை அரசுக்கு எந்தவிதமான உதவியையும் இந்தியா செய்யக்கூடாது என்பதை வேதனையோடு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.