பெருந்துறை அருகே 7 மயில்கள் மர்ம முறையில் இறப்பு…!!
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள கினிப்பாளையம் சுடுகாட்டில் 2 மயில்கள், சுடுகாட்டின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே 4 மயில்கள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஒரு மயில் என மொத்தம் 7 மயில்கள் நேற்று ஒரே நாளில் இறந்து கிடந்தன. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேட்டுப்பதூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜகோபாலுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் இதுகுறித்து பெருந்துறை தாலுகா அலுவலகத்துக்கும், ஈரோடு வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் பெருந்துறை துணை தாசில்தார் ரவி, ஈரோடு வனவர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த மயில்களை கைப்பற்றி, ஈரோடு கால்நடை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்ததா? என வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating