ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் நீர் மாசடையும் அபாயம்! மக்கள் விசனம்..!!
நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள அக்கரபத்தனை மன்றாசி நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகளை மன்றாசி நகரத்தினை அண்மித்து காணப்படும் பாலத்தின் அருகில் கொட்டப்படுகின்றது. இங்கு கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் ஆகுரோயா ஆற்றில் கலக்கப்படுவதால் ஆற்று நீர் மாசடைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேச மக்கள் குளிப்பதற்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த ஆற்று நீரையே பயன் படுத்துகின்றனர். இதன் காரணமாக தாம் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகரத்தில் சேர்க்கப்படும் குப்பைகள் பாதை ஓரத்தில் கொட்டப்படுவதாலும் அதனை நாய்கள் இழுப்பதால் அப்பகுதி சுகாதார நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஆகரா தோட்டப்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் இயங்குவதால் மன்றாசி நகரத்தில் கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் வந்து இப்பகுதியில் தேங்கி நிற்பதால் அங்கு தொழில் செய்யும் ஊழியர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசப்படுவதுடன் நுளம்பு தொல்லையும் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து நகரங்களிலும் வரவேற்பு மற்றும் பெயர்ப் பலகை காணப்பட்டாலும் இந் நகரத்தில் பெயர் பலகை இல்லாவிட்டாலும் சுகாதார நடவடிக்கையை பாதிக்ககூடிய விடயங்கள் காணப்படுவது வேதனை தரக்கூடிய விடயமாகும்.
எனவே நுவரெலியா பிரதேசசபை அதிகாரிகள் நகரத்தின் சுகாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு குப்பைகளை முறையான இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Average Rating