சுவாதி கொலை போல மேலும் ஒரு சம்பவம்: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிய கார் டிரைவர்…!!
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். சுவாதி கொலை சம்பவம் போல நடந்த இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த அண்ணாமலைபுதூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பானுமதி (வயது19) பீடி சுற்றும் தொழிலாளி. இவரை அதே பகுதி வீராணத்தை சேர்ந்த கார் டிரைவர் மாரியப்பன்(24) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தாராம். அவரது காதலை பானுமதி ஏற்கமறுத்து விட்டார்.
எனினும் மாரியப்பன் தொடர்ந்து தன்னை திருமணம் செய்யுமாறு பானுமதியை வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பானுமதிக்கும், வேறு ஒரு வாலிபருக்கும் இடையே திருமண பேச்சுவார்த்தை நடந்தது. இன்று காலை மணமகன் வீட்டார் வந்து பெண் பார்த்து நிச்சயம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக பானுமதியின் வீட்டார் பொருட்கள் வாங்க ஆலங்குளத்துக்கு வந்துவிட்டனர்.
பானுமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த வேளையில் அங்கு வந்த மாரியப்பன் எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்ககூடாது என கூறியவாறு அரிவாளால் வெட்டினார். உடனே பானுமதி அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னால் துரத்தி சென்ற மாரியப்பன் பானுமதியை சரமாரியாக வெட்டினார். இதில் பானுமதியின் கை துண்டானது.
பலத்த காயங்களுடன் பானுமதி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் பானுமதியை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அரிவாள் வெட்டுப்பட்டதில் பானுமதியின் கை துண்டானது.
இதனால் அவரது கையை சேர்ப்பதற்காக பானுமதி நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இதுபற்றி ஊத்துமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். சென்னை சுவாதி கொலை சம்பவம் போல நடந்த இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating