திருவாரூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொலை: மகன் கைது…!!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள காக்காகோட்டூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது82). இவர் கிராம கணக்கராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கற்பகவள்ளி, செல்வி என 2 மனைவிகள். இதில் முதல் மனைவி கற்பகவள்ளி இறந்துவிட்டார். இவருடைய மகன் செல்வம். 2–வது மனைவி செல்விக்கு தியாகராஜன் என்ற மகனும், கற்பகம் என்ற மகளும் உள்ளனர்.
தியாகராஜன் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். முத்துராமலிங்கத்திற்கு காக்காகோட்டூரில் 8 ஏக்கர் நிலம், ஒரு வீடு, திருவாரூரில் 3 வீடுகள் உள்ளன. இந்த சொத்துக்கள் தொடர்பாக முத்துராமலிங்கத்திற்கும், அவருடைய மகன் தியாகராஜனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக முத்துராமலிங்கம் கடந்த 5 ஆண்டுகளாக நன்னிலத்தில் தங்கி வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை முத்துராமலிங்கம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு முத்துராமலிங்கம் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக முத்துராமலிங்கத்தை, அவருடைய மகன் தியாகராஜன் கத்தியால் வயிற்றில் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating