வாய்த்தர்க்கம் கொலையாக மாறிய கொடூரம்…!!
மட்டகளப்பு கல்குடா பிரதேசத்தில் வாய்த்தர்க்கம் ஒன்றில் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்த்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை குடும்பஸ்த்தர் ஒருவர் பாசிக்குடா சுற்றுலா விடுதிகளின் கட்டுமான பணிக்காக வந்தவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.
இதன் போது இடம் பெற்ற தாக்குதலில் சிக்கி குடும்பஸ்த்தர் மரணமானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பாசிக்குடா சுற்றுலா விடுதித் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்குடாவைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தங்கராசா (51) என்பவரே தாக்குதலுக்குள்ளாகி தலையில் பலமாக காயமடைந்து மரணமடைந்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் வெள்ளிக்கிழமை பகல் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே வேளை மேலும் இருவர் வெள்ளிக்கிழமை இரவு பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் அனுராதபுரம் றிதிகல களுத்துறைரணகல கினிகத்பொல செவனகல பெலிகட உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தங்கராசா இரு நண்பர்களுடன் தமது வீட்டின் அருகாமையில் இருந்த கடையொன்றில் பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பும் வழியில், வீதியில் மது போதையில் நின்ற பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த மேற்குறித்த நபர்களுடன் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அது பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இவரது சடலம் அடக்கம் செய்யும் வேளையில் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பொலிசார் பூரண பாதுகாப்பு வழங்கியதாகவும் மரணம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மரணச் சடங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ஞா.ஸ்ரீநேசன் கிழக்கு மாகாண சபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating