இரு வேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட ஒருவர் படுகாயம்…!!
திருகோணமலை, மொறவெவ மற்றும் சம்பூர் பொலிஸ் பிரிவுகளில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், மூன்று வயது சிறுவன் மற்றும் ஆசிரியை ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி, காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் சாரதிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்த ஆசிரியை, திருகோணமலை, நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.தீபராணி (37 வயது) எனவும் தெரியவந்துள்ளது.
திருகோணமலையிலிருந்து, வவுனியா நோக்கிச்செல்வதற்காக வேகமாக வந்த வானும் மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நொச்சிக்குளம் பகுதியில் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
வானின் சாரதியை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் வீதியால்நடந்து சென்று கொண்டிருந்த 03 வயது சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
மேலும், படுகாயமடைந்த சிறுவன் மூதூர், சேனையூர் பகுதியைச் சேர்ந்த ஜே.லுக்ஸான் (03 வயது) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating