திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கற்பழித்து கொலை?: உடலை மீட்டு போலீசார் விசாரணை…!!
திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35), லாரி டிரைவர். இவரும் புதுக்கோட்டை மாவட்டம் தென்னனூரை சேர்ந்த ராஜகோபால் மகன் நதியா (28) என்பவரும் காதலித்து கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் தா.பேட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம்பெருமாள் கோவில் தெருவில் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். நேற்று பாலமுருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் நதியா மட்டும் குழந்தைகளுடன் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நதியா வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை பாலமுருகனின் உறவினரான வாலிபர் ஒருவர் மீட்டு, கோனேரிப்பட்டியில் உள்ள பாலமுருகன் வீட்டிற்கு காரில் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சென்றதும், பால முருகனின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்த அவர், நதியா வீட்டிற்குள் தூக்குப் போட்ட நிலையில் தொங்கினார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் வழியில் இறந்து விட்டார் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் பாலமுருகன் மற்றும் நதியாவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். எல்கை பிரச்சனை தொடர்பாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதில் உப்பிலியபுரம் போலீசாருக்கும், தா.பேட்டை போலீசாருக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நதியாவின் கழுத்தில் காயம் இருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் நகைக்காக நதியாவை மர்ம நபர்கள் யாராவது கொலை செய்தார்களா?, அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடலை ஒப்படைத்து விட்டு சென்ற வாலிபர், மேட்டுப்பாளையத்தில் உள்ள நதியாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் அந்த வாலிபர் நதியாவை கற்பழித்து கொலை செய்திருக்கலாமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் நதியா சாவுக்கான காரணம் குறித்து முழுவிவரம் தெரிய வரும்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating