தூத்துக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொலை: உறவினர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு…!!
தூத்துக்குடி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 52). இவர்களது மகன் முத்துக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் நெல்லையப்பன் மகள் லட்சுமிக்கும் திருமணம் நடந்தது.
முத்துக்குமாருக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து லட்சுமி, நெல்லையப்பனிடம் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று மாலை தனது மகள் வீட்டிற்கு நெல்லையப்பன் சென்றார். அங்கிருந்தவர்களிடம் தனது மகளுக்கும், அவரது கணவருக்கும் இடையே உள்ள தகராறு குறித்து தட்டிக் கேட்டார்.
அப்போது லட்சுமியின் மாமியார் முத்துலட்சுமிக்கும், நெல்லையப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நெல்லையப்பன் அரிவாளால் முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டினார். அவரை தடுக்க வந்த முத்துலட்சுமியின் தங்கை அம்மாள் (48), உறவினர் முத்துசாமி (35) ஆகிய இருவருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். உடனடியாக அங்கிருந்து நெல்லையப்பன் தப்பிச் சென்றார். உயிருக்கு போராடிய முத்துலட்சுமி உள்ளிட்ட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துலட்சுமி நேற்று இரவு இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நெல்லையப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating