நுண்ணிய புற்றுநோய் கட்டியை கண்டுகொள்ளாததால் பத்து வருடத்திற்கு பிறகு காலை இழந்த பெண்…!!
ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் ஜெரில் முர்ரே (27) என்ற பெண் வசித்து வருகிறார். தனது 15 வயதில் வலது காலின் பாதத்தின் பக்கவாட்டில் ஒரு மிகச்சிறிய கட்டி போன்று உள்ளதை பார்த்து கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.
அது வளர்ந்து வருவதை கவனித்தும், குடும்பத்தாரிடமும், தனது நண்பரிடமும் கூட சொல்லவில்லை. இப்படியே பத்து வருடங்களை கழித்தார்.
2014ம் ஆண்டு கோல்ப் பந்தின் அளவில் கட்டி பெரிதானது, இறுதியாக வேறுவழி இல்லை என்று தனது நண்பர் டெவிட் மெக்கென்ஷி-யிடம் கூறினார். விஷயத்தை அறிந்த மெக்கென்ஷி இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரிடம் அழைத்து சென்றார்.
முர்ரே காலில் உள்ள கட்டியை, சோதனை செய்த மருத்துவர்கள் அது புற்றுநோய் கட்டி என்று உறுதிப்படுத்தினர். மேலும் அது உடலில் பரவாமல் இருக்க காலின் மூட்டுக்கு கீழே உள்ள பகுதியை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினர்.
இதைக் கேட்ட முர்ரே, தனது வாழ்க்கை முடிவிற்கு வந்து விட்டதாகவே பயந்தார். இதை ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் தெரிவித்திருந்தால் இப்படி ஒரு இழப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என்று புலம்பி, முழு தன்னம்பிக்கையும் இழந்தார். பின்னர், வேறு வழியில்லை நடப்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.
2014ம் ஆண்டு ஜூன் மாதம் கிளாஸ்கோ ராயல் மருத்துவமனையில் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. புற்று கட்டியுடன் காலின் மூட்டிற்கு கீழே உள்ள பகுதியை ஆபரேசன் மூலம் அகற்றினர்.
சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது செயற்கை காலுடன் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்.
வாழ்க்கை முடிந்தவிட்டதாக நினைத்து வருந்திய அவரது வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சியாக மாறுவதற்கு, முழு காரணமும அவரது நண்பர் மெக்கென்ஷி.
முர்ரேவின் இக்கட்டான காலகட்டத்தில் அவருக்கு எல்லா உதவியும் செய்து, அவருடன் பயணித்துள்ளார். செயற்கை காலுடன் இருக்கப்போகும் பெண்ணை விரும்பாத பெரும்பாலானோர் மத்தியில், முர்ரே-விற்கு ஆபரேஷன் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் தனது வாழ்நாள் முழுவதும் அவருடன் வாழ விருப்பம் உள்ளதாக கூறி அவரிடம் சம்மதம் கேட்டுள்ளார் மெக்கென்ஷி. இந்த சொல்லே, முர்ரேவை மிக வலிமையானவளாக மாற்றி உள்ளது.
கடந்த கால வாழ்க்கையை நினைத்து கவலைப்படாமல் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதை உணர்ந்த இவர்கள் இரண்டு வருடங்களை மகிழ்ச்சியாக கடந்து தற்போது திருமண நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.