சித்தூர் அருகே காதல் தகராறில் மாணவி விஷம் குடித்து தற்கொலை…!!
சித்தூர் மாவட்டம் பாளையம்கொண்டாவை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவருடைய மகள் மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2–ம் ஆண்டு படித்து வந்தார். பாளையம்கொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்நாராயணா (வயது 20). இவரும், அந்த மாணவி படிக்கும் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இருவரும், கல்லூரிக்குப் பஸ்சில் சென்று வரும் போது, அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெங்கட்நாராயணா, அந்த மாணவியை பின்தொடர்ந்து செல்வது, அவரிடம் தன்னுடைய காதலை கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி, அந்த மாணவி தனது சகோதரர் ராஜுவிடம் கூறினார். ராஜு, வெங்கட்நாராயணாவை கண்டித்தார். அதேபோல் பல முறை கண்டித்தும் வெங்கட்நாராயணாவின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. அவரை, ராஜு மீண்டும் எச்சரித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த வெங்கட்நாராயணா தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜுவை தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெரியப்பா நாராயணசாமியின் வீட்டில் மாணவியை தங்க வைத்தனர். மாணவியை கல்லூரிக்கு அனுப்புவதையும் நிறுத்தி விட்டனர். வெங்கட்நாராயணா தனது நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதிக்கு அடிக்கடி சென்று, மாணவியிடம் காதலை கூறி கலாட்டாவில் ஈடுபட்டதாக தெரிகிறது. வெங்கட்நாராயணாவை, மாணவியின் பெரியப்பா நாராயணசாமி மீண்டும் கண்டித்தார். அதேபோல் நேற்று முன்தினமும் கண்டித்தார்.
இந்த நிலையில் காதல் நெருக்கடி சம்பவங்களால் மனமுடைந்த மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டு பெரியப்பாவின் நிலத்தில் மயக்கமடைந்து கிடந்தார். மாணவியை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மாணவியின் பெற்றோர் புங்கனூர் போலீசில், கல்லூரியில் படித்து வந்த வெங்கட்நாராயணா எங்களின் மகளை காதலிப்பதாக கூறி துன்புறுத்தி வந்தார். இதனால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவுக்கு வெங்கட்நாராயணா தான் காரணம் என்று புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating