மாவிலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் – ஆனந்தசங்கரி
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு ஏழை விவசாயிகளை ஆபத்திலிருந்து பாதுகாக்க தமிழ் சமூகம் ஏல்.ரி.ரி.ஈ யிடம் கோரவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டுள்ளார். 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் செய்கைபண்ணப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீரை மறுத்திருப்பதுடன் மனிதாபிமானமற்ற முறையில் 15 ஆயிரம் பேர் குடிப்பதற்கும், இதர தேவைகளுக்குமான தண்ணீர் மறிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் இதுபோன்ற மிருகத்தனமான செயல்கள் மூலம் தமிழ் சமூகத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன் சர்வதேச சமூகத்தின் அதிருப்தியை சம்பாதிப்பதை தவிர வேறு எந்த நன்மையையும் அவர்கள் அடையப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் அன்ரன் பாலசிங்கம், சட்டவல்லுனரான சிவா பசுபதி, முன்னணி சட்டத்தரணி வி.ருத்திரகுமார் போன்றவர்களை ஆலோசகர்களாக வைத்திருந்தபோதும் புலி தலைவர்கள் மீண்டும் தமது முதிர்ச்சியின்மையை, அனுபவமின்மையை, அறியாமையை தமது நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அன்ரன் பாலசிங்கம் மிகவும் பாதுகாப்பாக லண்டனில் உள்ளார். மற்ற இருவரும் புலிகளுக்குப் பயந்து மிக நீண்ட காலத்திற்கு முன்னரே இந்த நாட்டை விட்டு சென்றுவிட்டார்கள். இருப்பினும் அவர்களுடைய ஆலோசனைகளின் பிரகாரம் புலிகள் ஒரு அடி முன்னால் எடுத்து வைக்கின்ற அதே வேளை பல அடிகள் பின்னோக்கி தள்ளப்படுகிறார்கள் எனவும் வீ. ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.