தொடரும் கொடூரம்.. சென்னையை தொடர்ந்து ஐதராபாத்தில் 3 நாய்க் குட்டிகள் உயிருடன் எரிப்பு…!!
சமீபத்தில் சென்னை குன்றத்தூர் அருகே, இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மாடியிலிருந்து நாயை தூக்கி வீசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது பொதுமக்களையும் விலங்கின ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் உறையவைத்தது.
இந்த சம்பவம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள்ளாக ஐதராபாத்தில் 3 நாய் குட்டிகள் உயிருடன் எரிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.
ஐதராபாத் முஷீராபாத் பகுதியில் உள்ள ஏக் மினார் மசூதி அருகே வாஜீர் இடுகாட்டில், ஐந்து இளைஞர்கள், மரக்கட்டைகளில் தீ மூட்டி, அதில் உயிருடன் இருக்கும் மூன்று நாய்க் குட்டிகளை வீசிக்கொல்லும் வீடியோ பேஸ்புக்கில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீயில் வீசப்பட்ட நாய்க் குட்டிகள் தப்பிக்க முயற்சிக்கும் போது, ஐந்து இளைஞர்களும் கம்புகளை கொண்டு அவற்றை தீயில் தள்ளுகிறார்கள். இந்த கொடூர சம்பவத்தை வீடியோவாக எடுத்த இளைஞர்கள் அதை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விலங்கின ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சந்தேகத்திற்குரிய ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 18 வயதுக்கு குறைவான சிறார்களாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Average Rating