துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து…!!
துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
துபாயில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மரினா மாவட்டத்தில் 75 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள 35-வது தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. பின்னர் மேல் தளங்களுக்கும் மளமளவென தீ பரவியது. ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகளும் கடும் புகையும் வெளியேறியது. எரிந்துபோன கட்டிடத்தின் பாகங்கள் தரையில் வந்து விழுந்தன. இதனால் அப்பகுதியை நெருங்கவே பொதுமக்கள் அஞ்சினர்.
குடியிருப்பில் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக கீழ் தளங்களுக்கு விரைந்தனர். லிப்ட் மூலம் வருவதற்கு தாமதம் ஆகும் என்பவதால், சிலர் மாடிப்படிகளில் ஓடி வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக செய்தி வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு, உலகின் 127-வது உயரமான கட்டிடம் ஆகும். துபாயின் 23-வது உயரமான கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating