கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராக…
நோயுற்று, சிகிச்சை பெற்றுவரும் கியூபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு கியூபா மக்களுக்கு, அந்நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்துவரும் கியூபா நாட்டவரின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. குடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக பிடல் காஸ்ட்ரோ அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். அதனால், நாட்டின் ஆட்சிப் பொறுப்பைத் தாற்காலிகமாக தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காஸ்ட்ரோவுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்துமாறு அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
கியூபாவில் உள்ள சோசலிஸ ஆட்சி பிடிக்காமல் ஏராளமான கியூபா நாட்டவர் அங்கிருந்து தப்பி, அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளனர். “கியூப அமெரிக்கர் தேசிய ஸ்தாபனம்’ என்ற அமைப்பை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதன் தலைவரான ஜார்ஜ் மாஸ் சான்டோஸ்தான் மேற்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்.
“”வேறு அரசியல் பாதையில் கியூபா செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற, அந் நாட்டைச் சேர்ந்த தைரியமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்று ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி, பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிரான கிளர்ச்சியை அவர்கள் தொடங்க வேண்டும். அது மக்களின் கிளர்ச்சியாகவும் இருக்கலாம்; ராணுவக் கலகமாகவும் இருக்கலாம். அது கியூபாவை ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு செல்வதாக இருக்க வேண்டும்” என்றார் அவர்.
இதற்கிடையில், கியூபாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அமெரிக்க அரசு உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.