திருவனந்தபுரம் அருகே பூட்டிய வீட்டுக்குள் குழந்தையுடன் கணவன், மனைவி கருகி சாவு…!!
திருவனந்தபுரத்தை அடுத்த அமரவிளையை சேர்ந்தவர் அனில்ராஜ் (வயது 35).
அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அருணா (31). இவர்களின் மகள் அனிஷா (4).
இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மண்ணந்தலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். நேற்று இவர்களின் வீட்டில் இருந்து கருகிய வாடை வந்தது. அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டுக்குள் அனில்ராஜ், அவரது மனைவி அருணா, மகள் அனிஷா ஆகிய 3 பேரும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.
வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பிரிட்ஜ் ஆகியவை வெடித்து தீப்பிடித்து கருகி கிடந்தன. இது பற்றி அப்பகுதி மகக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து 3 பேரின் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பூட்டிய வீட்டுக்குள் அனில்ராஜ் மற்றும் அவரது மனைவி, மகள் கருகி இறந்தது எப்படி? அவர்களாக தீ வைத்து தற்கொலை செய்தார்களா? அல்லது வீட்டில் தீப்பிடித்து கருகி இறந்தார்களா? என்பது மர்மமாக உள்ளது.
இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating