பட்டுக்கோட்டை மயானத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல்: ஈமசடங்கு செய்ய சென்ற உறவினர்கள் அதிர்ச்சி…!!
பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவர் கடந்த 20–ந்தேதி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் வெளியில் வந்து அங்கிருந்த பெஞ்சியில் படுத்திருந்தவர் திடீர் என கீழே விழுந்ததில் மண்டை உடைந்து சிறிது நேரத்தில் இறந்தார்.
இதையடுத்து அவரின் உறவினர்கள் உடலை பெற்று சென்று நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு மயானத்தில் எரியூட்ட ஒப்படைத்து சென்றனர். நேற்று காலை அவரின் ஈமகாரியங்கள் செய்ய சாம்பலை பெறுவதற்காக எரிவாயு மயானத்திற்கு அவரது உறவினர்கள் சேகர் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் உறவினர்களுடன் வந்தனர்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பதட்டத்துடன் வேகவேகமாக மண்பானையில் எலும்புகள் மற்றும் சாம்பலை அள்ளி கொடுத்துள்ளனர். இதில் சந்தேகப்பட்ட உறவினர்கள் எரியூட்டும் அறையை திறக்க சொல்லி பார்த்த போது அங்கு அய்யாச்சாமியின் உடல் பாதி எரிந்து பாதி எரியாத நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடன் இதுகுறித்து தஞ்சை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் பல மணி நேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், நகராட்சி ஆணையர் அட்சயாவை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating