திருவனந்தபுரம் அருகே வயலில் மர்ம பொருள் வெடித்து 2 பெண்கள் படுகாயம்…!!
திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு களை பறிக்கும் வேலை நேற்று நடந்தது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள் ஒரு மர்ம பொருள் கிடந்தது. அதனை வயலில் களை பறித்து கொண்டிருந்த லீலா (வயது 59), ஆனி (51) ஆகியோர் பார்த்தனர்.
அந்த பொருள் என்ன என்பதை அறிய அவர்கள் இருவரும் அதை ஆர்வமுடன் பிரித்து பார்த்தனர். அப்போது அந்த பார்சல் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் லீலா, ஆனி இருவரின் கையும் சிதைந்தது. அதிர்ச்சி அடைந்த இருவரும் வலியால் அலறினர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இரு பெண்களையும் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மர்ம பொருள் வெடித்த இடத்திற்கு வெள்ளறடை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு சென்று ஆய்வு செய்ததோடு, வெடித்த பொருள், வெடிகுண்டா என்பதை கண்டறிய அதனை சோதனை கூடத்திற்கு எடுத்து சென்றனர்.
இந்த பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவம் நடந்து உள்ளது. அப்போதும் இது போல வயலில் வேலை செய்த பெண்கள் படுகாயம் அடைந்தனர். அதன்பின்பு இப்போது மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்து உள்ளது. எனவே இந்த பகுதியில் மர்ம பொருள்களை வீசி செல்லும் நபர்கள் யார்? எப்படி இந்த பொருள்கள் இங்கு கொண்டு வரப்படுகிறது என்பது பற்றி போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளிகொணர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Average Rating