இஸ்ரேல் மீது 230 ராக்கெட்டுகள் வீசித்தாக்குதல் ஹிஸ்புல்லா பதிலடி
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அந்த நாட்டினர் மீது 230 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இஸ்ரேலியர் பலியானார். லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களை கடத்திச்சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்காக லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் மீது கடந்த மாதம் 12-ந் தேதி விமானத்தாக்குதலை தொடங்கியது. அது முதல் கடந்த 23 நாட்களாக விமானத்தாக்குதலை நடத்தி லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டை கான்கிரீட் குப்பை மேடாக இஸ்ரேல் மாற்றிவிட்டது.
இந்த தாக்குதலால் ஹிஸ்புல்லாவின் தாக்கும் திறனை முறித்துவிட்டதாக இஸ்ரேல் தம்பட்டம் அடித்துக் கொண்டது.
இஸ்ரேலின் இந்த தம்பட்டம் அர்த்தம் அற்றது என்பதை நிரூபிக்கும் வகையிலும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் நேற்று 230 ராக்கெட்டுகளை வீசித்தாக்கினர். இதில் இஸ்ரேல் வீரர் ஒருவர் பலியானார். இது தான் இந்த 23 நாட்களில் ஹிஸ்புல்லா நடத்திய மிக மோசமான தாக்குதல் ஆகும். லெபனான் எல்லை அருகே உள்ள பெய்ட் ஷீன் நகரில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் நேற்று பெய்ரூட் நகரின் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியது. அதோடு சிரியா அருகே உள்ள அக்கார் நகரின் மீதும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் பாலஸ்தீனத்தில் உள்ள காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியானார்கள். மேலும் வீடு, வீடாக சென்று சோதனையும் நடத்தப்பட்டது
இதற்கிடையில் கனா கிராமத்தில் நடந்த இஸ்ரேல் தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் நடத்திய விசாரணையில் விமானத்தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்தில் அப்பாவி பொது மக்கள் இருப்பது ராணுவத்துக்கு தெரியவில்லை என்று தெரியவந்து உள்ளது.
அந்த கட்டிடம் மீது 2 குண்டுகள் வீசப்பட்டன. ஒரு குண்டு மட்டும் வெடித்தது. அந்த கட்டிடத்தில் பொதுமக்கள் இருப்பது தெரிந்திருந்தால் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கமாட்டாது என்று அந்த விசாரணைஅறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு மலேசியாவில் நடந்தது. அதில் பேசிய பல்வேறுதலைவர்களும் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மர்ட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, லெபனான் நாட்டில் எங்கள் லட்சியத்தை நாங்கள் எட்டி விட்டோம் என்றும் தெற்கு லெபனானில் சர்வதேசப்படை நிறுத்தப்பட்டு அது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தாமல் கண்காணிக்க வேண்டும். அதுவரை ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்றும் கூறினார்.