இஸ்ரேல் குண்டு வீச்சு: லெபனானின் பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது
இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் ஏவுகனைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறார்கள். இன்று 24-வது நாளாக இஸ்ரேலின் தாக்குதல் நீடித்தது.
ஏற்கனவே குண்டு வீச்சில் சின்னா பின்னமான பெய்ரூட் நகரம் மீது இஸ்ரேல் விமானங்கள் இன்று காலை சக்தி வாய்ந்த 2 குண்டுகளை வீசியது. இதில் பெய்ரூட் நகரமே குலுங்கியது. இதில் பெய்ரூட் நகர கட்டிடங்கள் பற்றி எரிந்தன.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் விமானங்கள் “பொதுமக்கள் தப்பி பாதுகாப்பான இடத்துக்கு ஓடுங்கள், குண்டு வீசப் போகிறோம்” என்று எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை வீசியது.
இதை தொடர்ந்து பெய்ரூட் நகர மக்கள் லட்சக்கணக்கில் வீடுகளை விட்டு ஓடினார்கள்.இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 10 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் தொடர்ந்து ஏவுகனை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இன்று மட்டும் 206 ஏவுகனைகளை வீசியது. இதில் இஸ்ரேலின் பீரங்கி படையை சேர்ந்த 7 வீரர்கள் பலியானார்கள்.
இஸ்ரேல் நடத்திய விமான குண்டு வீச்சில் இதுவரை லெபனானில் 900 பொது மக்கள் பலியாகி உள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது வேதனைக்குரிய விஷயம்.
பழிக்குப்பழி வாங்க இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை ஏவுகனை வீசி அழிக்கப் போவதாக ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கூறியுள்ளனர்.